லண்டன், மார்ச் 7 – உலகப் பெருங்கடலின் வெப்பநிலை பிப்ரவரி மாதம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
உலகெங்கும் கடலில் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாக 21.06 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் பருவநிலை மாற்றச் சேவை இன்று தெரிவித்தது.
கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 1979ஆம் ஆண்டு முதல் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அது ஆக அதிகமாக 20.98 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக பிப்ரவரி உலகின் ஆக வெப்பமான மாதமாக தெரிவிக்கப்பட்ட வேளையில் கடல் வெப்பநிலை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
கடல் நீர் வெப்பம் அதிகரிப்பதால் நான்காவது முறையாக, மிகப் பெரிய அளவில் பவளப்பாறைகள் நிறமிழக்கும் நிகழ்ச்சி உலகின் தென்பாதியில் ஏற்படக்கூடும் என்று கடல்துறை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உலகம் இதுவரை சந்தித்திராத வகையில், இது மோசமாக இருக்குமென்று கணித்துள்ளனர்.