செப்பாங், பிப்ரவரி 27 – சிலாங்கூர், டெங்கில், கம்போங் பாருவில், பொது இடத்தில் கைகலப்பில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக் கொண்ட வயதான வர்த்தகர் ஒருவருக்கு, 700 ரிங்கிட் அபராதம் விதித்து செப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும், அவருடன் சண்டையில் ஈடுபட்ட மற்றொரு நபர் தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
அதனால், 60 வயதான தியு கான் லீ அபராதம் செலுத்திய பின் விடுவிக்கப்பட்ட வேளை ; அவருடன் சண்டையில் ஈடுபட்ட 44 வயது தியோ சிட் கியோங் எனும் லோரி ஓட்டுனர், ஆயிரம் ரிங்கிட் உத்தரவாததின் பேரில் விடுவிக்கப்பட்டார்.
அவ்வழக்கு விசாரணை ஏப்ரல் 22-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, இம்மாதம் 17-ஆம் தேதி, அண்டை வீட்டை வழி மறித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை அகற்றுமாறு கூறியதை தொடர்ந்து அவர்களுக்கு இடையில் சண்டை மூண்டதாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில், இரு வீட்டையும் சேர்ந்த 18 பேர் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்ட வேளை ; மறுநாள் அவர்கள் அனைவரும் போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.