புத்ராஜெயா, மார்ச் 21 – திரங்கானு உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு மாநிலத்திற்கான நிதி ஒடுக்கீட்டையும், ஒற்றுமை அரசாங்கம் தடுத்ததில்லை.
மாறாக, இவ்வாண்டு மாநில அரசாங்கங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
குறிப்பாக, திரங்கானுவிற்கு இவ்வாண்டு 159 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ள வேளை ; அந்த தொகை 2023-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 155 கோடி ரிங்கிட்டை காட்டிலும் அதிகம் என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதே சமயம், திரங்கானுவிற்கு முந்தைய அரசாங்கம் வழங்கியதை காட்டிலும், நடப்பு ஒற்றுமை அரசாங்கம் வழங்கும் நிதி ஒதுக்கீடு அதிகம் எனவும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
2023-ஆம் ஆண்டு பெட்ரோலிய வருவாயின் அடிப்படையில், 78 கோடியே 60 லட்சம் ரிங்கிட் மானியத்தையும் திரங்கானு பெற்றுள்ளது.
அதனால், திரங்கானு மாநில அரசாங்கத்திடம், மத்திய அரசாங்கம் பாரபட்சமாக அல்லது கடுமையாக நடந்து கொள்வதாக கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
திரங்கானுவில், அதிகமான ஏழை மக்கள் உள்ளனர். எனவே, எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வழியாகவும் செல்லாமல், தேவைப்படுவோருக்கு நேரடியாக ஒதுக்கீடுகளை வழங்கும் அணுகுமுறைகளை அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது. பேரிடர் காலங்களிலும் அது பொருந்தும் என பிரதமர் தெளிவுப்படுத்தினார்.