புதுடில்லி, மார்ச் 10 -தமிழ் நாட்டை தளமாகக் கொண்டு மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலுள்ள போதைப் பொருள் கும்பலுடன் தொடர்புள்ள போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாடிக்கை இந்திய போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர். புதுடில்லியில் ஜாஃபர் சாடிக் அப்துல் ரஹ்மானை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு கைது செய்தது. ‘Methampetamine; தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை ரசாயனமான 50 கிலோ ‘Pseudoephedrine; (சூமோபீட்ரின் ) பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்பில் ஜாஃபர் சாடிக் கைது செய்யப்பட்டதாக ‘NCB’ எனப்படும் இந்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் துணை தலைமை இயக்குனர் ஞானேஷ்வர் சிங் தெரிவித்தார்.
போதைப் பொருள் மூலம் பெறப்பட்ட பணத்தை கொண்டு மங்கை என்ற தமிழ்ப்படத்தை தயாரித்ததையும் ஜாஃபர் சாடிக் ஒப்புக் கொண்டதாக அவர் கூறினார். திரையுலக பிரமுகர்களுடன் ஜாஃபர் சாடிக்கிற்கு இருக்கும் தொடர்புகளை கண்டறியும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 2019ஆம் ஆண்டு ‘Ketamine’ போதைப் பொருளை மலேசியாவுக்கு அனுப்பியதை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து ஜாஃபர் சாடிக் போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டது முதல் முறையாக தெரியவந்தது.
போதைப் பொருள் மூலம் கிடைத்த பணத்தை பயன்படுத்தி சொத்துடமை, கட்டுமான தொழில் , ஹோட்டல் திரைப்படத்துறை மற்றும் உணவுப் பொருள் தயாரிப்பு தொழில்துறை போன்றவற்றில் ஜாஃபர் சாடிக் ஈடுபட்டதாக ஞானேஷ்வர் சிங் கூறினார். உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருட்களை ஜாஃபர் சாடிக் பல்வேறு நாடுகளுக்கும் கடத்தியுள்ளான்.