பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 29 – KLIA 1 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், நேற்று மாலை விமானத்திற்காக காத்திருந்த பெண் பயணி ஒருவர், திடீரென விமான நிலையத்திலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பெண்ணுக்கு, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் உதவும் அவசரமான தருணத்தை, மலேசியா ஏர்போர்ட்ஸ் வாரியம் தனது X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.
“வாவ்!, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின், முதலாவது முனையத்தில், பெண் ஒருவர் பாதுகாப்பாக குழந்தையை பிரசவித்துள்ளார். அவருக்கு உதவிய AVSEC – விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் சபாஷ்” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர், தாயும், சேயும் மேல் மருத்துவ பரிசோதனைக்காக, செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கும் அச்சம்பவம் தொடர்பான பதிவை, இணைய பயனர்கள் பலர் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.
குறிப்பாக, பிறப்புப் பத்திரத்தில், குழந்தையின் பிறந்த இடம், KLIA விமான நிலையம் என குறிப்பிடுங்கள்” என அவர்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.