ஜோகூர் பாரு, டிசம்பர் 26 – ஜோகூர் பாரு, தமான் உங்கு துன் அமினா, அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள, வீடொன்றில், குடும்ப உறுப்பினர் ஒருவரை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு தம்பதியை கைதுச் செய்து போலீசார் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர்.
41 வயது அந்நிய நாட்டு பெண் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன், அடுக்குமாடி வீடொன்றில் இறந்து கிடக்க காணப்பட்டதை தொடர்ந்து, அந்த தம்பதி கைதுச் செய்யப்பட்டனர்.
கொல்லப்பட்ட பெண், தனது 24 வயது சகோதரன் மற்றும் அவனது 41 வயது மனைவியுடன் அந்த வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், அதிகாலை மணி 2.30 வாக்கில் அப்பெண் கொலையுண்ட வேளை ; சம்பவ இடத்திலிருந்து அவரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் கைப்பற்றியுள்ளதாக, ஜோகூர் பாரு உதாரா போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் பல்வீர் சிங் தெரிவித்தார்.
கொலைக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது. கொலையுண்டவருக்கும், கொலை செய்த தம்பதிக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் நிகழும் என்பது, அண்டை வீட்டுக்காரர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்த கொலை தொடர்பில் அதிகாலை மணி 4.35 வாக்கில், போலீசுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்ட வேளை ; அதே நாள் இரவு மணி 7.47 வாக்கில், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலுள்ள, குப்பை அகற்றும் பகுதிக்கு அருகில் கொலையாளிகள் இருவரும் கைதுச் செய்யப்பட்டதை, பல்வீர் உறுதிப்படுத்தினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 12 பிரம்படிகளுடன் கூடிய 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.