பெர்லின் , மார்ச் 12 – சீனாவுடன் மலேசியா சிறந்த நட்புறவை கொண்டிருந்தாலும் எந்தவொரு கடுமையான விவகாரங்களை எதிர்நோக்கவில்லையென ஜெர்மனிக்கு மலேசியா உறுதியளித்துள்ளது. மலேசியா ஒரு சிறிய நாடாக இருந்தாலும், பெரும்பாலான நாடுகளுடன் நட்புறவை வைத்துக்கொள்ளும் உரிமையை அது கொண்டுள்ளது.
குறிப்பாக இத்தகைய நட்புறவினால் ஏற்படும் ஒத்துழைப்பினால் அதன் மக்கள் பயன் அடைவது உறுதிப்படுத்தப்படும் என அன்வார் தெரிவித்தார். மலேசியா மற்றும் வட்டாரத்தில் என்ன நடக்கிறது என்பது உட்பட உங்கள் நேர்மை, புரிதல் ஆகியவற்றில் தாம் மிகவும் ஈர்க்கப்பட்டதாக ஜெர்மன் ‘Chancellor Olaf Scholz’சுடன் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அன்வார் கூறினார்.
வட்டாரத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் தாக்கத்தை மலேசியா ஒப்புக்கொண்டாலும், மலேசியா தனது இறையாண்மை மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் மற்ற நாடுகளுடன் நல்ல நட்புறவை பேணுவதற்கு உறுதிபூண்டுள்ளது என்றும் அன்வார் தெரிவித்தார். தென் சீனக் கடல் மீதான அக்கறை உட்பட, வட்டாரத்தில் சீனாவின் செல்வாக்கிலிருந்து எழும் சவால்களை எதிர்கொள்ள ஆக்கபூர்வமான பங்கேற்பு, ஈடுபாடு மற்றும் கலந்துரையைடலின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
உலகளவில் மலேசியாவின் சிறந்த வர்த்தகப் பங்காளியாக சீனா இருக்கிறது என்பதோடு , இரு நாடுகளும் தங்களுக்கிடையே தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட 50வது ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடுவதையும் ‘Scholz’சுடனான இருதரப்பு சந்திப்பின்போது அன்வார் சுட்டிக்காட்டினார். இதனிடையே உக்ரைன் போர் விவகாரத்தில் , ரஷ்யா அங்கு தனது ஆக்கிரமிப்பை நிறுத்தி, மோதலுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்பதில் தாங்கள் இணக்கம் கண்டதாக அன்வார் கூறினார்.