ஜெரான்டுட், டிசம்பர் 26 – பஹாங், ஜாலான் ஜெரான்டுட் – பென்டா சாலையில், இரு நபர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய காணொளி ஒன்று வைரலானதை அடுத்து, அவ்விருவரும் நேற்று தாமாக முன்வந்து ஜெரான்டுட் போலீஸ் தலைமையகத்தில் சரணடைந்தனர்.
லோரியை அபாயகரமாக ஓட்டிச் சென்று, புரோட்டோன் பெர்சோனா காரை மோதும், 52 வினாடி காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி இருப்பதை, தமது தரப்பு அடையாளம் கண்டிருப்பதாக, ஜெரான்டுட் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஜ்மான் மாட் காமிஸ் தெரிவித்தார்.
அச்சம்பவம், டிசம்பர் 23-ஆம் தேதி, காலை மணி 8.30 வாக்கில் நிகழ்ந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதில், 20 வயது மற்றும் 60 வயது மதிக்கத்தக்க இரு ஓட்டுனர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
அவ்விரு ஓட்டுனர்களுக்கும் இடையே ஏற்பட்ட சினமூட்டும் செய்கையின் விளைவாக, அவர்கள் இதர சாலை பயனர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், வாகனங்களை செலுத்தியதும் தெரிய வந்துள்ளதாக, அஜ்மான் சொன்னார்.
உளவு நடவடிக்கை மற்றும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலை அடுத்து, அவ்விருவரும் அடையாளம் காணப்பாட்டதாக கூறப்படுகிறது.