கோலாலம்பூர் – மார்ச் 13 – இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆலய வளாகத்தில் 33 அடி உயரத்திற்கு வேல் ஊன்றப்பட்டது.
ஆலாய நிர்வாகத்தினர் மற்றும் சில பக்தர்கள் புடைசூழ கிரேன் உதவியோடு மிக உயரமான அந்த வேல் ஊன்றும் நிகழ்வு நடைபெற்றது.
இம்முறை நடைபெறவிருக்கும் 93ஆவது பங்குனி உத்திரா திருவிழாவுக்கான ஏற்பாடு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாக ஆலயத் தலைவர் டத்தோ தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
நாளை மறுநாள் மார்ச் 15ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறவிருக்கின்றன.
உச்சக்கட்டமாக பங்குனி உத்திர திருவிழா நடைபெறும் என அவர் கூறினார்.
இம்முறை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் ஏந்தி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் செய்து வருகிறது.குறிப்பாக ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
பங்குனி உத்திரா திருவிழாவை முன்னிட்டு நுற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுவார்கள்.
இவ்வாண்டும் பத்துமலையிலிருந்து பக்தர்கள் பாத யாத்திரை மேற்கொண்டு மரத்தாண்டவர் ஆலயத்திற்கு வருவார்கள்.
அந்த வகையில் இவ்வாண்டு 12 குழுக்களாக 1,500 பேர் பாத யாத்திரையாக மாரானுக்கு வரவுள்ளனர்.
மேலும் மார்ச் 24ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஸ்ரீ கங்கை இசைக் குழுவின் குமார் தலைமையில் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங், சபாய் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உட்பட பல பிரமுகர்கள் பங்குனி உத்திரா திருவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பக்தர்கள் திரளாக வந்து இந்த விழாவில் கலந்து மாரான் மரத்தாண்டவரின் அருளை பெற்று செல்லுமாறு டத்தோ தமிழ்ச்செல்வன் கேட்டு கொண்டார்.