கோலாலம்பூர், பிப் 1 – கட்சிக்கு துரோகம் இழைத்த லபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைலி அப்துல் ரஹ்மான் உட்பட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியிலிருந்து விலக வேண்டும் என பெர்சத்து கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் கட்சியின் விதிமுறைகளை மீறி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவித்தது கட்சிக்கு இழைக்கப்பட்ட துரோகம் என பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டாக்டர் அஃபிஃப் பஹார்டின் தெரிவித்திருக்கிறார். தம்மையும் இதர ஐந்து எம்.பிக்களையும் கட்சியிலிருந்து நீக்கும்படி சுஹைலி சவால் விடுத்திருப்பது குறித்து தாமான் மேடான் பெர்சத்து சட்டமன்ற உறுப்பினருமான அஃபிஃப் பஹார்டின் பதில் அளித்துள்ளார்.
லபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து சுஹைலி உடனடியாக பதவி விலக வேண்டும். கட்சி உறுப்பினர்களின் முதுகில் குத்திய தஞ்சோங் காராங், புக்கிட் கந்தாங், ஜெலி, குவா முசாங், கோலாகங்சார் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது எம்.பி பதவியிலிருந்து விலக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அரசியல் மற்றும் சட்ட ரீதியில் பதிலடி கொடுக்கப்படும் என அஃபிஃப் பஹார்டின் தெரிவித்தார்.