
ஷா ஆலம் ஜூலை 25 – ‘டாக்டர் கஞ்சா’ என்று அழைக்கப்படும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தூக்கு தண்டனையில் இருந்து தப்பியிருக்கின்றார்.
அதேசமயம் அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
64 வயதான கேப்டன் அமிருதீன் நடராஜன் அப்துல்லா என்பவர், கஞ்சா செடிகளை பயிரிட்டதாக 18 வழக்குகளையும், கஞ்சா வைத்திருந்ததாக 4 வழக்குகளையும், போதைப்பொருளை உட்கொண்டதாக ஒரு குற்றத்தையும் எதிர்கொண்டிருந்தார்.
77.48 கிலோ மற்றும் 14.647 லிட்டர் போதைப்பொருளை கடத்திய வழக்கில், அவருக்கு எதிரான 16 குற்றச்சாட்டுகளை உயர்நீதிமன்றம் இன்று திருத்தியது.
நீதிபதி ஜூலியா தனது இறுதி தீர்ப்பில், “முன்னாள் ராணுவ வீரர் அமிருதின் தனது நோய்க்கு மாற்று சிகிச்சையாக கஞ்சாவை பயன்படுத்த ஆசைப்பட்டார். இருப்பினும் இதே போன்ற கருத்து உள்ளவர்களுக்கு இந்த தண்டனை ஒரு தடையாக இருக்கட்டும்” என்று கூறினார்.
2019 அன்று தொடங்கிய இந்த விசாரணையில் மொத்தம் அரசுத்தரப்பினர் 17 பேர் மற்றும் ஐந்து சாட்சிகள் சாட்சியமளித்தனர்.