
வாஷிங்டன், ஏப்ரல்-19- அமெரிக்கா முழுவதும் 90 பல்கலைக்கழகங்களில் குறைந்தது 600 அனைத்துலக மாணவர்களின் விசா அனுமதியை அதிபர் டோனல்ட் டிரம்ப் இரத்துச் செய்து அதிரடி காட்டியுள்ளார்.
விரிவுரையாளர்கள், ஆராய்ச்சியாளர்களும் அதிலடங்குவர்.
நீதிமன்ற ஆவணங்கள், வழக்கறிஞர்களின் அறிக்கைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அறிவிப்புகள் வாயிலாக அது தெரிய வந்திருப்பதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முதலில் தெரிவிக்காமல், மாணவர் பதிவு முறையில் அவர்களின் விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான சம்பவங்களில், பல்கலைக்கழக நிர்வாகங்களுக்குக் கூட அவ்விஷயம் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
விசா இரத்தான மாணவர்களில் எவரும் குற்றச்செயல்களில் சிக்கவில்லை.
ஆனால் அவர்களில் சிலர், ஏற்கனவே சிறு சிறு குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர்; ஆனால் அவை, சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படும் அளவுக்கான குற்றங்கள் அல்ல என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் மேற்கல்வியைத் தொடர அவர்கள் அனுமதிக்கப்படுவார்களா அல்லது அமெரிக்காலிலிருந்து விரட்டியடிக்கப்படுவார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
பயங்கரவாதத்தையும் ஹமாஸ் போன்ற அமைப்புகளையும் ஆதரிப்போர், அமெரிக்காவுக்கான விசா அனுமதியைப் பெற தகுதியற்றவர்கள் என, அந்நாட்டு குடிநுழைவு மற்றும் குடியுரிமைச் சட்டம் வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.