மலாக்கா , ஜன 5 – மலாக்கா, கம்போங் மோர்டனில் சுங்கை மலாக்கா கரையோரம் அங்காடிக் கடையில் குடிநுழைவு துறை அதிகாரிகள் சோதனையிட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த வெளிநாட்டைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறி ஒருவர் அவர்களிடமிருந்து தப்புவதற்காக ஆற்றில் குதித்தவர் மீண்டும் பிடிபட்டார். 20 வயதுடைய அந்த இந்தோனேசிய இளைஞர் ஆற்றில் நீந்தி மறுகரையில் அடைந்து நிம்மதி பெருமூச்சு விட்டபோது அவர் கைது செய்யப்பட்டார். நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை சுங்கை மலாக்கா ஆற்றோரத்தில் வியாபாரம் நடத்தி வருவோர் மற்றும் அங்காடி கடைகளில் உள்ள சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு எதிரான வேட்டையில் தாங்கள் ஈடுபட்டதாக மலாக்கா குடிநுழைவுத்துறையின் இயக்குனர் அனிர்வான் ஃபௌஸி முகமட் ஐனி தெரிவித்தார்.
சுங்கை மலாக்கா ஆற்றோரம் மற்றும் மலாக்கா மாநகரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வியாபாரம் செய்து வருவதாக புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சட்டவிரோத தொழிலாளர்களை துடைத்தொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். கோல்ப் கிளப், கார் கழுவும் பட்டறை, காற்கறி தோட்டங்கள் மற்றும் வெளிநாட்டினர் குடியிருக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வேலை பெர்மிட் இன்றி வேலை செய்த இலங்கையைச் சேர்ந்த ஐந்து ஆடவர்கள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.