
கோலாலம்பூர், ஏப் 28 -இன்று முதல் அமலுக்கு வந்துள்ள தரவு பகிர்வுச் சட்டம் 2025 அரசாங்கச் சேவைகளை மேம்படுத்தவும், தனிநபர் தரவுகளையும் பாதுகாக்கவும் துணைபுரியும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
பெரிதும் எதிர்பாக்கப்பட்ட இந்த சட்டம் அமலுக்கு வந்த இன்றைய நாள் மலேசியாவிற்கு வரலாற்று மிக்க ஒரு நாளாகும். இந்தச் சட்டம் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதோடு அமைச்சுகளுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் இடையே பாதுகாப்பான தரவு பகிர்வுக்கு சட்டப்பூர்வமான, கட்டமைக்கப்பட்ட ஒரு தரவு பகிர்வு முறையை வழங்குகிறது என கோபிந்த் சிங் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
தரவு பகிர்வு தொடர்பான ஒரு விண்ணப்பம் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டு செய்யப்படும்போதும், கோரப்பட்ட தரவு பகிரப்படலாமா, வேண்டாமா என்று தீர்மானிப்பதில், தேசிய தரவு பகிர்வு குழு கடுமையான மதிப்பீட்டை மேற்கொள்ளும்.
இந்தப் புதிய சட்டம் பொதுச் சேவைப் பணியை மேம்படுத்தும் நோக்கம் கொண்டதோடு பொது சேவை துறைகளில் விரைவான முடிவெடுப்பதற்கும், சிறந்த ஒருங்கிணைப்புக்கும் வழிவகுக்கும்.
தரவுப் பகிர்வும், தரவு பகுப்பாய்வும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு இன்றியமையாததாகும். குறிப்பாக சுகாதாரம், விவசாயம் மற்றும் நகர திட்டமிடல் போன்ற பல்வேறு துறைகளை மேம்படுத்த இது உதவுகிறது.
இதன் விளைவாக புதுமையான மற்றும் சாத்தியமான தீர்வுகளைப் பெற இது வழிவகுக்கும்.
இந்தச் சட்டம் துல்லிய தரவுகளை உள்ளடக்கிய இணைப்பை வலுப்படுத்துவதால், நாட்டு மக்களின் நலனுக்காகவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் பேருதவியாக அமையும்.
நாடு செயற்கை நுண்ணறிவுத் துறையில் பீடுநடை போட வேண்டும் எனும் மடானி அரசின் இலட்சியத்தை இது மேலும் துரிதப்படுத்தும்.