அலோர் ஸ்டார், ஜனவரி 31 – லங்காவியில், ரசீது இன்றி நூறு ரிங்கிட்டை அபராதமாக செலுத்தியதாக கூறிப்படும் புகார் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள இரு வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை போலீசார் தொடர்புக் கொண்டுள்ளனர்.
அச்சம்பவம் தொடர்பில், புக்கிட் அமான் விசாரணையை தொடங்கியுள்ளதாக, கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ பிசோல் சாலே தெரிவித்தார்.
லங்காவியில், மோட்டார் சைக்கிளில் செல்லும் வெளிநாட்டு தம்பதியை, போலீஸ் இடைமறிக்கும் 44 வினாடி காணொளி ஒன்று நேற்று தொடங்கி வைரலாகியுள்ளது.
ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த குற்றத்திற்காக அந்த தம்பதி தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த காணொளியில் ரசீது இன்றி நூறு ரிங்கிட்டை அபராதமாக செலுத்துமாறு கோரும் உரையாடலும் இடம்பெற்றுள்ளது.
அதனால், குற்றவியல் சட்டம், ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் மற்றும் தொடர்பு பல்லூடக சட்டங்களின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படும் வேளை ; அச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.