தஞ்சோங் மாலிம், ஜனவரி 11 – பேராக், சுங்கைக்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், உயர் ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதி, திடீரென பாதை மாறிய லோரியின் பின்புறத்தை மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயம் அடைந்தனர்.
நேற்று காலை மணி 10.30 வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.
அவ்விபத்தில், யமஹா MT-09 ரக உயர் ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த அதன் 31 வயது ஓட்டுனருக்கு, இரு கைகளும் முறிந்த வேளை; தலையிலும் காயம் ஏற்பட்டது.
அவரது 31 வயது மனைவி, முகத்தில் காயத்திற்கு இலக்கானார்.
34 வயது நபர் ஒருவர் செலுத்திய லோரி ஒன்று, முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல ஏதுவாக, எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி, திடீரென பாதை மாறியதே அவ்விபத்துக்கான காரணம் என்பதை, முஹாலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் ஹஸ்னி முஹமட் நாசிர் உறுதிப்படுத்தினார்.
காயமடைந்த தம்பதி, சிலிம் ரீவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை; லோரி ஓட்டுனருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.