புத்ராஜெயா, பிப்ரவரி 8 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை சிறையிலிருந்து விடுவிக்கும் அம்னோவின் நிலைப்பாட்டை, டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாயிட் ஹமிடி மறுஉறுதிப்படுத்தியுள்ளார்.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எது எப்படி இருந்தாலும், அது பேரரசரின் தனிப்பட்ட உரிமைக்கு உட்பட்டது என்பதால், இதற்கு முன், நஜிப்பின் சிறைத் தண்டனையை குறைத்த, பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லாவின் முடிவுக்கு மதிப்பளிப்பதாக சாயிட் சொன்னார்.
நாட்டின் 16-வது பேரரசரான அல்-சுல்தான் அப்துல்லா தலைமையிலான மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்.
எனினும், நஜிப்பை முழுமையாக சிறையிலிருந்து விடுவிக்க தேவையான மேல் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த வாரம், மன்னிப்பு வாரியம், நஜிப்பின் சிறைத் தண்டனையை ஆறாண்டுகளாகவும், அபராதத்தை 21 கோடியிலிருந்து ஐந்து கோடி ரிங்கிட்டாகவும் குறைத்தது.
இந்நிலையில், நேரம் வரும் போது, நஜிப் மீண்டும் மன்னிப்பு வாரியத்திடம் புதிய விண்ணப்பத்தை ஒப்படைப்பார் என அவரது வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹமட் ஷாப்பி அப்துல்லா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.