கோலாலம்பூர், டிசம்பர் 14 – ஆசிரியர் என நம்பப்படும் ஆடவர் ஒருவர், சிறுவனை திரும்ப திரும்ப அறையும் காணொளி வைரலாகி, இணையப் பயனர்களின் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது.
அந்த 42 வினாடி காணொளி, வார்க குவாந்தன் ஆஃபீசியல் ‘Warga Kuantan Official’ முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த காணொளியில், பள்ளி நிகழ்ச்சிக்காக அலங்காரம் செய்யப்பட்ட மேடையில், அவ்வாடவர் சம்பந்தப்பட்ட சிறுவனை பலமுறை கன்னத்தில் அறைவதோடு, அவனை தள்ளி தலையில் அடிக்கிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாரோ ரகசியமாக அந்த காணொளியை பதிவுச் செய்ததாக நம்பப்படுகிறது.
எனினும், அச்சம்பவம் எங்கு, எப்பொழுது நிகழ்ந்தது என்பது தெரியவில்லை.
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் அந்த காணொளியை இதுவரை ஈராயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள வேளை ; “காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்ளும் அந்நபரை கல்வி அமைச்சு உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்” என பலர் தொடர்ந்து சினத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.