நிபோங் திபால், மார்ச்-15 – பினாங்கு நிபோங் திபாலில் உள்ள பிரிட்டிஷ் காலத்து பண்ணை வீட்டின் கூரை மீது கிரேன் விழுந்து, அந்த பாரம்பரியக் கட்டடம் கடும் சேதமடைந்திருப்பதால், அதனை உடனடியாக பழுதுப் பார்க்குமாறு அதன் உரிமையாளர் உத்தரவிடப்பட்டுள்ளார்.
பாரம்பரியக் கட்டடங்களின் பராமரிப்பு தொடர்பில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி, அந்த பழுதுப் பார்ப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு, செபராங் பிறை நகராண்மைக் கழகம் MBSP அந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அந்த Rumah Agam 99 Pintu பண்ணை வீடு, செபராங் பிறையில் பாரம்பரியக் கட்டடமாக பட்டியலிடப்பட்டுள்ளது; ஆனால் இன்னும் அரசிதழில் அது இடம் பெறவில்லை என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ‘Jason H’ng Mooi Lye’ சொன்னார்.
கடந்த வெள்ளிக் கிழமை, படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட கிரேன் அவ்வீட்டின் கூரையின் மீது விழுந்ததில், அக்கட்டடம் கடும் சேதமடைந்தது.
சம்பவம் அறிந்து MBSP ஊழியர்களும் போலீசும் அங்கு சென்ற போது, அவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை; கதவுப் பூட்டிக் கிடந்ததாக Jason கூறினார்.
எனவே, அதன் உரிமையாளர் யாராயினும், விரைந்து பழுதுப் பார்ப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.
ஒரு தனியார் சொத்தான அங்கு தற்போது யாரும் குடியிருப்பதாக தெரியவில்லை.
அந்த பண்ணை வீடு, ‘Ramsden’ என்ற பிரிட்டிஷ் வர்த்தகரால் செம்பனைத் தோட்டத்தின் நடுவே கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
10 அறைகள், நடன மண்டபம், பெரிய வரவேற்பறை என பிரிட்டிஷ் வேலைபாடுகளுடன் அந்த பங்களா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அறையிலும் 5 முதல் 6 கதவுகள் வைக்கப்பட்டிருப்பதால், அது ‘99 கதவுகள் கொண்ட வீடு’ என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது.