ஷா ஆலாம், ஏப்ரல் 16 – தனது தந்தையால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 11 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பாகிஸ்தான் ஆடவன் ஒருவனுக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஐந்து பிரம்படிகளையும், ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியுள்ளது.
அதோடு, 39 வயது யூசப் குல் எனும் அவ்வாடவனுக்கு, சிறையில் இருக்கும் போது விதிக்கப்பட்ட புனர்வாழ்வு ஆலோசனை மற்றும் தண்டனை முடிந்த பிறகு மூன்றாண்டுகள் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனும் உத்தரவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காட்டியுள்ளான். அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமியும், தன்னை கற்பழித்தவர்களில் அவ்வாடவனும் அடங்குவான் என்பதை உறுதிச் செய்துள்ளார்.
அதனால் அவனுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை மாற்றவோ, குறைக்கவோ வேண்டிய அவசியம் இல்லை என, நீதிபதி ரோசியாநயாதி அஹ்மாட் கூறியுள்ளார்.
2018-ஆம் ஆண்டு, நவம்பரில், ஹுலு லங்காட்டிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அவன், அச்சிறுமியை கற்பழித்தது குறிப்பிடத்தக்கது.