கோலாலம்பூர், அக்டோபர்-9, சட்டம் 741 என்றழைக்கப்படும் 2012 தபால் சேவை சட்டத்தைத் திருத்தும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
அதற்காக முன் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil) தெரிவித்தார்.
இந்த 12 ஆண்டுகளில் காலம் எவ்வளவோ மாறி விட்டது; இன்னும் 10 ஆண்டுகளில் மேலும் பல மாற்றங்கள் நிகழலாம்.
காலமாற்றத்திற்கேட்ப அச்சட்டமும் திருத்தப்பட வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.
அதற்கு ஏதுவாக மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) ஆலோசனைக் குழுவொன்றை அமைத்திருக்கிறது.
அக்குழு தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க 8 முதல் 12 மாதங்கள் வரை பிடிக்கும்.
அதனைக் கருத்தில் கொண்டால், ஆக சீக்கிரமாக 2026-ல் அச்சட்டம் திருத்தப்படலாமென்றார் அவர்.
கோலாலம்பூர் Pos Malaysia கட்டடத்தில் இன்று அனைத்துலக தபால் தினக் கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றியப் பிறகு ஃபாஹ்மி அவ்வாறு சொன்னார்.
இவ்வேளையில், Pos Malaysia சேவையில் AI அதிநவீன தொழில்நுட்ப பயன்பாடு அமுலுக்கு வரவிருந்தாலும், அதன் ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என ஃபாஹ்மி உத்தரவாதமளித்தார்.
Pos Malaysia-வுக்கு தற்போது நாடு முழுவதும் 18,000 ஊழியர்கள் இருக்கிறார்கள்.