இஸ்கந்தர் புத்திரி , மார்ச் 14 – ஜோகூர் பாருவில் புக்கிட் இண்டாவில் உணவு வாங்கச் சென்றிருந்தபோது தனது ஏழு வயது மகள் கடத்தப்பட்டதாக அச்சிறுமியின் தந்தை கூறியிருந்ததை போலீசார் மறுத்தனர்.
முழுமையாக உடற்பயிற்சி உடையில் காணப்பட்ட அந்த சிறுமி தனியாக காரில் விடப்பட்டதை தொடர்ந்து தன்னந் தனியாக திரிந்து கொண்டிருந்ததாக இஸ்கந்தர் புத்திரி மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் இப்ராஹிம் மாட் சோம் தெரிவித்தார்.
தனது பிள்ளையை தனியாக காரில் விட்டுச் சென்ற அந்த தந்தையின் அலட்சியப் போக்கே இச்சம்பவத்திற்கு காரணம் என அவர் கூறினார்.
அந்த காரின் கதவு பூட்டப்படாமலும் அக்காரின் இயந்திரம் நிறுத்தப்படாமலும் அந்த ஆடவர் தனது மகளை காரிலேயே விட்டுவிட்டு நேற்று நண்பல் மணி 12. 50 அளவில் உணவு வாங்க சென்றுள்ளார்.
திரும்பி வந்தபோது காரில் தனது மகள் இல்லாமல் போனதை தொடர்ந்து அச்சிறுமியின் தந்தை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
தனது தந்தை உணவு வாங்கச் சென்ற சில நிமிடங்களில் சிறுமி காணாமல்போன சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டன.
அந்த சிறுமி தன்னந்தனியாக சுற்றிக்கொண்டிருந்த இடத்தில் அவ்வழியாக காரில் சென்ற ஒரு தம்பதியர் அச்சிறுயின் உடையில் அணிந்திருந்த பள்ளியின் பெயர் கொண்ட சின்னம் இருந்ததைக் கண்டு அந்த பள்ளியில் விட்டுச் சென்றதைத் தொடர்ந்து பள்ளி வகுப்பாசிரியர் அந்த மாணவியின் பெற்றோரை தொடர்புகொண்டு அவரது மகள் பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.