செப்பாங், ஜனவரி 8 – ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தேவையான, SD – உறுதிமொழி கடிதங்களை, பெரிகாத்தான் நேஷனல் வைத்திருப்பதாக, கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹமட் சனுசி மாட் நோர் கூறியிருப்பது தொடர்பில், கருத்துரைக்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துவிட்டார்.
பெரிகாத்தான் நேஷனல் தேர்தல் இயந்திர தலைவருமான சனுசி முன்வைத்துள்ள கூற்றுகளுக்கு பதிலளிக்க தாம் விரும்பவில்லை எனவும், மாறாக, நாட்டை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் சொன்னார்.
“பரவாயில்லை. அவர் விரும்புவதை சொல்லட்டும். அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் எனது கடமையை செய்கிறேன்” என பிரதமர் குறிப்பிட்டார்.
உண்மையில் பெரிய பிரச்சனை எதுவும் எழுந்தால், அப்பொழுது கட்டாயம் பதிலளிக்க தயார் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
முன்னதாக, ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க, போதுமான SD – உறுதிமொழி கடிதங்களை பெரிகாத்தான் நேஷனல் வைத்திருப்பதாக, சனுசி கூறியிருந்தார்.
எனினும், அது குறித்து மேல் விவரங்களை வெளியிடாத சனுசி, அரசாங்கத்தை கைப்பற்றும் நாளுக்காக காத்திருப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.