பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 6 – 1990-களில், ஸ்பான்கோ (Spanco) நிறுவனத்துடன் கையெழுத்தான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, ஊழல் தடுப்பு ஆணையம் சிலரை அழைத்துள்ளது.
அதில், நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவரும் அடங்குவார்.
அரசாங்க வாகனங்களின் கொள்முதல் மற்றும் நிர்வகிப்பு தொடர்பான அந்த குத்தகையை வழங்கும் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரணைக்காக அழைக்கப்படுவார்கள் என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உயர் ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார்.
அதில், அப்போதைய பிரதமரும், நிதி அமைச்சரும் அடங்குவார்கள் என்றாரவர்.
அரசாங்கத்தின் வாகனங்களை வாங்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் 450 கோடி ரிங்கிட் மதிப்பிலான ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட முன்னாள் நிதி அமைச்சரும், தொழிலதிபரும், முக்கிய அரசாங்க அதிகாரிகள் சிலரும் கடந்த மாதம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.
அவ்விவகாரம் தொடர்பில், சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் வீட்டிலும், நான்கு அலுவலகங்களிலும் சோதனையை மேற்கொண்ட ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள், அது தொடர்பில் விரைவில் மேலும் சிலர் அழைக்கப்படுவார்கள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.