பந்திங், ஜனவரி 22 – சிலாங்கூர், பந்திங், ஜாலான் பந்திங்-டெங்கில் சாலையில், ஐந்து வாகனங்களை உட்படுத்திய கோர விபத்தில், இருவர் உயிரிழந்தனர்.
அவ்விபத்தில், 40 வயது பெண் ஒருவரும், பத்து வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை மணி 7.03 வாக்கில், அவ்விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்புப் படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குனர் அஹ்மாட் முக்லீஸ் முக்தார் தெரிவித்தார்.
லோரி ஒன்று ஹோண்டா சிட்டி, புரோடுவா பெஸ்ஸா உட்பட மேலும் இரு வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானது.
அதில், நசுங்கிய புரோடுவா பெஸ்ஸா காரில் சிக்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர், காலை மணி 8.45 வாக்கில் மீட்கப்பட்ட வேளை ; அவர் காலில் காயத்திற்கு இலக்காகி இருந்தார்.
அதே காரில் பயணித்த பெண்ணும், சிறுமியும் முறையே காலை மணி 9.40-க்கும், 9.45-க்கும் மீட்கப்பட்ட வேளை ; அவர்கள் உயிரிழந்து விட்டதை மருத்துவ பணியாளர்கள் பின்னர் உறுதிப்படுத்தினர்.