கோலாலம்பூர், ஜன 3 – நஜீப் ரசாக்கின் சிறை தண்டனை குறைக்கப்பட்டது தொடர்பில் நாட்டின் மன்னிப்பு வாரியத்தின் நடைமுறைகளை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். மலேசிய பிரஜை என்ற முறையில் “SRC International” வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மன்னிப்பு வாரியத்திற்கு முறையிடும் உரிமையை முன்னாள் பிரதமர் பெற்றுள்ளதாக அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்க்காணலில் அன்வார் தெரிவித்தார். இது பிரதமர் அல்லது அரசாங்கத்திற்கு அப்பாற்பட்ட முடிவாகும்.
பேரரசரின் முடிவை தாம் மதிப்பதாக அன்வார் கூறினார். யார் எப்படி நினைத்தாலும் தண்டிக்கப்பட்ட எவரும் மன்னிப்பு வாரியத்திற்கு முறையீடு செய்யும் உரிமையை கொண்டுள்ளதோடு மன்னிப்பு வாரியத்தின் முடிவு மதிக்கப்பட வேண்டும் . அதே வேளையில் அந்த முடிவு தொடர்பில் புதிய பேரரசரிடம் நஜீப் இன்னமும் விண்ணப்பிக்கலாம் என அன்வார் கூறினார். 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை மன்னிப்பு வாரியத்தின் உறுப்பினராக அன்வார் இருந்துள்ளார். பிரதமர்துறையின் கீழ் கூட்டரசு பிரதேச அமைச்சு இருப்பதால் கூட்டரசு பிரதேச அமைச்சர் என்ற முறையில் மன்னிப்பு வாரியத்தில் டாக்டர் ஸலிஹா முஸ்தபா உறுப்பினராக இருக்கிறார்.