கோலாலம்பூர், ஜனவரி-10, தலைநகரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் தள்ளுவண்டி மற்றும் உணவங்காடி விபாரிகளால் ஏற்படும் பிரச்னைகளை முறியடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும்.
அனுமதியில்லாமல் வியாபாரம் செய்யும் வெளிநாட்டினர், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் உள்ளிட்டவையும் அவற்றிலடங்குமென, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL கூறியது.
இவ்வாண்டு DBKL கவனம் செலுத்தவிருக்கும் நிலைத்தன்மை, தூய்மை உள்ளிட்ட விவகாரங்களில் இதுவும் அடங்குமென, மாநகர மன்ற ஆலோசக வாரியத்தின் உறுப்பினர் Andre Lai Chen Heng கூறினார்.
மேற்கண்ட விஷயங்கள் குறித்து பொது மக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் கிடைத்து வருகின்றன; ஆனால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் அவ்வளவாக திருப்தியளிக்கவில்லை என்றார் அவர்.
அதன் காரணமாகத் தான், DBKL மேற்கொள்ளும் அமுலாக்க நடவடிக்கைகளில் வாரிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டுமென், KL மேயர் ஊக்குவிப்பதாக Andre சொன்னார்.
ஆலோசக வாரிய உறுப்பினர்களின் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு செயல்வடிவம் பெறுமென்றும் மேயர் உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.
மாநகரவாசிகளுக்கானச் சேவையை மேம்படுத்த ஏதுவாக, SOP நடைமுறைகளை தரமுயர்த்தவும் நேற்றைய வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.