கோலாலம்பூர், டிச 1 – முதலீட்டு மோசடி திட்டத்தில் சுமார் 11 மில்லியன் ரிங்கிட் இழந்த பாதிக்கப்பட்ட 80 பேர் இதற்கு முன் கெடாவில் செயல்பட்ட அந்த முதலீட்டு நிறுவனத்திற்கு எதிராக போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த திட்டத்தில் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்த அனைவரும் ஜோகூர், பெர்லிஸ் மற்றும் கெடாவை சேர்ந்தவர்களாவர். இவர்களில் பலர் கடந்த மார்ச் மாதம் முதல் இந்த மாதம் வரை போலீசில் புகார் செய்திருப்பதாகவும் ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மலேசிய அனைத்துலக சமூக மனித இயக்கத்தின் தலைமைச் செயலாளர் ஹிஷாமுடின் ஹாஷிம் தெரிவித்தார்.
அந்த முதலீட்டு நிறுவனம் பெரிய அளவில் அறிமுகமாகவில்லை என்றாலும் ஜோகூர், மலாக்கா, கெடா மற்றும் பெர்லிஸ்சில் கிளை அலுவலகங்களை கொண்டிருந்ததோடு முதலீட்டாளர்களுக்கு 45 நாட்களில் கூடுதலான லாப ஈவு வழங்குவதாக கூறியதோடு சொத்துடமைகளை முதலீட்டாளர்களுக்கு வாடகைக்கு விடுவதாகவும் தெரிவித்திருந்ததாக அவர் கூறினார். தொடக்கத்தில் அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு லாப ஈவு வழங்கியதாகவும் அதன் பின் அந்த தொகை தொடர்ந்து வழங்கப்படவில்லையென ஹிஷாமுடின் ஹாஷிம் தெரிவித்தார்.