
கிள்ளான், 25 மார்ச் – தவறான நிர்வாகத்தால் இந்திய தொழில் முனைவர்கள் பெரும் இழப்புக்களை சந்திக்கின்றனர் என தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணனின் தனிச் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் தெரிவித்தார். இம்மாதிரியான சூழ்நிலைகளைத் தடுக்க தெக்கூன் மூலமாக மிக பெரிய திட்டத்தை டத்தோஸ்ரீ ரமணன் தொடக்கிவைக்க இருப்பதாகவும் இது தொழில் நிர்வாகத் திறனை வளர்க்க பேருதவியாக இருக்கும் எனவும் அன்புமனி சுட்டிக்காட்டினார்.
அண்மையில் கிள்ளானில் ஜெய சக்தி கூட்டுறவு கழகத்தின் தொழில் முனைவோர் கருத்தரங்கை தொடக்கிவைத்து உரையாற்றியபோது அன்புமனி இதனை தெரிவித்தார். இந்த கருத்தரங்கில் 120 இந்திய தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இக்கருத்தரங்கில் தெக்கூன் உதவித் திட்டம், அமனா இக்தியார், எஸ்எம்இ, சக்கிம் போன்ற தொழில் உதவித் திட்டங்கள் ஒரே மேடையில் இணைக்கப்பட்டு, அவற்றின் பயன்பாடு, விண்ணப்ப முறை, செயல்பாடு, மற்றும் வணிக உத்திகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
மேலும் கடன் உதவி பெற்ற தொழில்முனைவோர்கள் இம்மாதிரியான கருத்தரங்குகளில் கலந்துகொள்வதால், வணிக வளர்ச்சிக்கான திசையை உறுதிப்படுத்த முடியும். அதோடு அண்மையில் ஐ-பேப் திட்டத்தின் கீழ் 48 இந்திய சிறு தொழில்முனைவோர்களுக்கு மொத்தமாக 2.96 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டுள்ளதும்.
இது தொழில்முனைவோருக்கான அரசின் அர்ப்பணிப்பை காட்டுவதாகவும் அன்புமனி தெரிவித்தார். இதனிடையே ஜெய சக்தி கூட்டுறவு கழகம் கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதோடு இதில் 800க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருப்பதாக ஜெய சத்தி கூட்டுறவுக் கழகத்தின் தலைவர் டத்தோ பாஸ்கரன் தெரிவித்தார்.
இந்திய தொழில் முனைவோர்கள் அரசாங்க உதவிகளை முறையாக அறிந்து பயன்பெற, இம்மாதிரியான கருத்தரங்குகள் பெரும் ஆதரவாக இருக்கும் என்பதையும் அவர் கூறினார். கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் பிரதிநிதியாக, கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் மற்றும் காப்பர் வட்டார இந்து சங்க தலைவர் திரு. அருள்நேசன் ஜெயபாலனும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்