கோலாலம்பூர், நவம்பர் 18 – கடந்த நவம்பர் 16ஆம் திகதி, சிலாங்கூர், சுபாங் ஜெயாவிலுள்ள, பேரங்காடி ஒன்றின், கார் நிறுத்துமிடத்தில், வெளிநாட்டு ஆடவன் ஒருவன் சிறுநீர் கழிக்கும் காணொளி ஒன்று வைரலாகி வலைத்தளவாசிகளின் கண்டனைத்தைப் பெற்றது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட அந்த ஆடவன் ஆஸ்திரேலிய நாட்டவன் என்பது கண்டறியப்பட்டதோடு அவன் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டு அவனுக்கு இன்று சுபாங் ஜெயா நீதிமன்றம் 100 ரிங்கிட் அபராதத்தை தண்டனையாக விதித்தது.
சிஹ் பீட்டர் எனும் அவ்வாடவன் சிறுநீரை இதற்கு மேலும் அடக்க முடியாத சூழலால் அப்படி பொதுவிடத்தில் நடந்துக் கொண்டதாக அவனது வழங்கறிஞர் முன்னதாக வாதங்களை முன்வைத்திருந்தார். அதே சமயம் தன் செயலை ஒருவர் காணொளியாக பதிவு செய்தது அவர் அறியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, தனது கட்சிக்காரர் தவற்றை உணர்ந்துள்ளதோடு, இது போல தவறு மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வார் என வழக்கறிஞர் உறுதியளித்தார்.