பிரேசில், மார்ச் 25 – பிரேசிலில் ஏற்பட்ட புயல், கனமழைக்கு ஏறக்குறைய 20 பேர் பலியான நிலையில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து, அதிகபட்சமாக 62 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்த வெப்ப அலையைத் தொடர்ந்து திடீரென புயல் தாக்கியதோடு, கனமழையின் காரணமாக வெள்ளமும் பெருக்கெடுத்து ஒடியது.
இதில் Mimoso do Sul நகரில், குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 8 பேர் Rio de Janeiroவில் பலியானதாகவும், அவர்களில் பலர் நிலச்சரிவுகளால் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை முதல் சுமார் 90 பேர் மீட்கப்பட்டதாக ரியோ அரசு மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய அவசரக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று சிறுமி ஒருவரையும் தேடுதல் குழுவினர் மீட்டுள்ளனர்.
சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கியிருந்த நிலையில் அந்த சிறுமி மீட்கப்பட்டதாகவும், அவரது தந்தை அருகில் இறந்து கிடந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அச்சிறுமியை வீரத்துடன் பாதுகாத்து அந்த தந்தை இறந்ததாக நம்பப்படுகிறது.