
கோலாலம்பூர், ஏப்ரல்-29, SPM தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வறிக்கையில் தேசியக் கொடி தவறாக இடம் பெற்ற சர்ச்சைக்குப் பொறுப்பேற்று, கல்வி அமைச்சின் மூத்த அதிகாரிகள் பதவி விலக வேண்டுமென்றக் கோரிக்கையை, அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் நிராகரித்துள்ளார்.
நடந்த தவறு குறித்து உள்விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை முழுமைப் பெற முதலில் நாம் வாய்ப்பு வழங்க வேண்டுமென்றார் அவர்.
நடந்த தவறு சாதாரணது அல்ல; அதற்கு முழுப் பொறுப்பேற்று கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர், மலேசியத் தேர்வு வாரியத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பதவி விலக வேண்டுமென, முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அது குறித்தே ஃபாட்லீனா கருத்துரைத்தார்.
ஜாலூர் கெமிலாங் சாதாரண விஷயமல்ல; எனவே தவறுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிய முழு விசாரணை முக்கியம் என்பதை தாம் ஏற்கனவே வலியுறுத்தியிருப்பதால், அனைவரும் சற்று பொறுமைக் காக்குமாறு ஃபாட்லீனா கேட்டுக் கொண்டார்.
ஒரு நட்சத்திரத்திற்கு பதிலாக இரு நட்சத்திரங்கள், 14 சிவப்பு-வெள்ளைக் கோடுகளுக்கு பதிலாக வெறும் 8 கோடுகள் என AI உருவாக்கிய தேசியக் கொடியை சரியாகக் கவனிக்காமல் அச்சடித்து கல்வி அமைச்சு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
ஏற்கனவே பிறையில்லாமல் முழுமையற்ற தேசியக் கொடியை பிரசுரித்து 2 உள்ளூர் சீன நாளேடுகளும் ஒரு சிங்கப்பூர் நிறுவனமும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது