பினாங்கு, நவ 6 – தம்மை இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரியென கூறியிருக்கும் ஸாகிர் நாயக்கிற்கு எதிராக வழக்கு தொடுக்கப்போவதாக பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி தெரிவித்திருக்கிறார். கடந்த சனிக்கிழமையன்று நைஜீரியாவில் ஆற்றிய உரையில் அந்த இஸ்லாமிய போதகர் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டிருப்தாக ராமசாமியின் வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் திந்ட் தெரிவித்தார். ஸாகிர் நாயக் ஆற்றிய உரையின் காணொளி அவரது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எங்களது கட்சிக்காரருக்கு எதிராக ஸாகிர் நாயக் வெளியிட்ட குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்று என இன்று வெளியிட்ட அறிக்கையில் ஷம்ஷேர் தெரிவித்தார். அந்த குற்றச்சாட்டை ஸாகிர் நாயக் மீட்டுக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு மீண்டும் இப்படியொரு குற்றச்சாட்டை கூறப்போவதில்லை என்று அவர் உறுதியளிக்க வேண்டும் என்றும் ராமசாமி கேட்டுக்கொண்டார்.
14 நாட்களுக்குள் தமது கோரிக்கையை ஸாகிர் நாயக் நிறைவேற்ற தவறினால் அவருக்கு எதிராக தமது வழக்கறிஞர்கள் அவதூறு வழக்கை தொடுப்பார்கள் என்றும் ராமசாமி கூறியுள்ளார். அந்த காணொளி தொடர்பில் புக்கிட் மெர்தாஜம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தாங்கள் புகார் செய்துள்ளதாகவும் ஷம்ஷேர் தெரிவித்தார். ஸாகிர் நாயக் வெளியிட்டுள்ள கருத்து குற்றவியல் அவதூறு அம்சத்தை கொண்டிருப்பதோடு பல்லூடகத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும் ஷம்ஷேர் கூறினார்.