குவாந்தான், பிப்ரவரி 18 – குவாந்தான், செப்பாட் கடலில் ஏற்படும் பெரிய அலைகளில் சிக்கி நீரில் மூழ்கும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக விடுக்கப்பட்ட சிவப்புக் கொடி எச்சரிக்கையை, சிலர் இன்னமும் துச்சமாக நினைக்கின்றனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு நீந்த வேண்டாம் எனக் கூறியும், பொது மக்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை என்பது வைராலாகியுள்ள காணொலியைப் பார்த்தாதே தெரிகிறது.
அதில், மக்களை எச்சரிக்கும் விதத்தில் அங்கு சிவப்புக் கொடி நட்டப்பட்டிருந்தும், சிலர் அக்கடலில் நீந்துகின்றனர். அங்கு சிவப்புக் கொடி இருப்பது மட்டுமல்ல, பின்னால் கடல் அலையும் ஆபத்தான அளவில் இருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.
இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலர் சினம் கலந்த ஏமாற்றம் தெரிவித்தனர்.
மக்களின் பாதுகாப்புக்காக விடுக்கப்படும் எச்சரிக்கையை அவர்கள் துச்சமாக நினைத்து, உயிரோடு விளையாடுவதேன் ? என கருத்து கூறி வருகின்றனர்.
இப்படி சிலர் ஆர்வக் கோளாறினால் கடலில் இறங்கி, நீரில் மூழ்கினால் யாரைக் குறை சொல்வது என நெட்டிசன்கள் நியாயமான கேள்வியை முன்வைக்கின்றனர்.
2022 டிசம்பர் மாதமே மலேசியப் பொது தற்காப்புப் படை (APM) அங்கு அந்த சிவப்புக் கொடியை ‘காட்டி விட்டதாக’ அறியப்படுகிறது.
அக்காணொலி எடுக்கப்பட்ட இடம், நேரம் குறித்த சரியான தகவல் இல்லையென்றாலும், அங்கு எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் கடலில் இறங்கியவர்களின் செயலை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என நெட்டிசங்களில் ஒரே சேர கூறுகின்றனர்.