கோலாலம்பூர், பிப் 3 – பினாங்கு சுப்ரமணி பாரதி தமிழ்ப் பள்ளியின் புதிய கட்டிட புளோக்கிற்கு வருகை புரியும் மற்றும் செடி நடும் விழாவில் கல்வி அமைச்சர் Fadhlina Sidek மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ S . Sundarajoo ஆகியோர் கலந்துகொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் வேளையில் அந்த நிகழ்ச்சியில் Fadhlina Sidek உரையாற்றாமல் சென்றது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக பினாங்கு மாநில ம.இ.கவின் தலைவர் டத்தோ J. Dhinagaran தெரிவித்திருக்கிறார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் முயற்சிகள், முன்னேற்றங்கள் மற்றும் குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளுக்கான அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் குறித்து அமைச்சர் தமது உரையில் விரிவாக விவரிப்பார் என்ற நம்பிக்கையில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய சமூகத்தினர் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். இது தமிப்பள்ளி விவகாரங்களில் கல்வி அமைச்சு காட்டும் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது
என்றார் அவர்.
தொடக்கத்திலிருந்தே இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான பல நிபந்தனைகளை மாநில கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி மேலாளர் வாரியம் , பெற்றோர் சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வலியுறுத்தி வந்தது என அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வாழ்த்து பாடல் இடம்பெறக்கூடாது என முதலில் கட்டாயமாக வலியுறுத்தப்பட்டது என்றும் தினகரன் தெரிவித்தார். இதனை அறிந்து மாநில கல்வித்துறை அதிகாரிகளிடம் அனுமதிபெற டத்தோஸ்ரீ S.Sundarjoo விடம் கூறியிருந்தேன். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழ் வாழ்த்து பாடல் கட்டாயம் பாடப்பட வேண்டும் என மாநில கல்வி அதிகாரிகளிடம் Sundarajoo நினைவுறுத்தியதன் அடிப்படையில் இடம்பெற்றது. இதே போன்ற சம்பவம்தான் 2023 ஆம் ஆண்டு தேசிய தமிழ் மொழி விழாவிலும் தமிழ் வாழ்த்து பாட அனுமதிக்கப்படவில்லை என்பதை நாங்கள் நினைவுறுத்த விரும்புகிறோம்.
கல்வி அமைச்சர் , மாநில மற்றும் மாவட்ட கல்வித் துறைகளின் செயல்பாடு குறித்து ஏமாற்றம் அடைவதோடு அரசாங்கம் தேசிய ஒற்றுமையை ஊக்குவித்து வருவதால் சொந்தமான சட்டங்கள் அல்லது விதிகளை அமல்படுத்துவதற்கு சில குட்டி நெப்போலியன்களுக்கு இடமில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் எனவும் தினகரன் வலியுறுத்தினார்.