சுங்கைப் பட்டாணி , டிச 4 – கெடா, சுங்கைப் பட்டாணியில் புக்கிட் செலம்பாவில் பழைய உலோகப் பொருள், மின் இணைப்பு கம்பிகள் மற்றும் செம்புகள் போன்றவை வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்று தீயில் அழிந்தது. நேற்று இரவு மணி 7.57 அளவில் அந்த கிடங்கில் தீ பிடித்ததாக தகவலை பெற்றதை தொடர்ந்து நான்கு தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த தீயணைப்புப் படை வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக கெடா தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் மூத்த அதிகாரி வான் முகமட் ஹமிசி தெரிவித்தார்.
அந்த கிடங்கிற்கான மின்சார விநியோகத்தை Tenaga Nasional Berhad துண்டித்ததால் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீயணைக்கும் பணியை சுமுகமாக மேற்கொள்ள முடிந்ததாக அவர் கூறினார். நான்கு பிரிவாக பிரிந்து அந்த கிடங்கின் தீயை அணைக்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதாக வான் முகமட் ஹமிசி தெரிவித்தார். தீயணைப்பு படைக்கு உதவியாக தொண்டூழிய உதவியாளர்களும் செயல்பட்டனர். நேற்றிரவு மணி 10.20 அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் எவரும் காயம் அடையவில்லை.