கோலாலம்பூர், பிப்ரவரி 28 – நோன்புப் பெருநாளுக்காக 3 நாட்களுக்கு தீபகற்பத்திற்கும் சபா, சரவாக், லாபுவானுக்குமான ஒருவழி விமானப் பயணத்திற்கு அதிகபட்ச கட்டணமாக மானிய விலையில் 599 ரிங்கிட்டை நிர்ணயித்துள்ள அரசாங்கம், அதை 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏற்புடையது அல்ல.
பெரும் செலவினத்தை உட்படுத்தும் என்பதால் அது சாத்தியமில்லாத ஒன்று என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெளிவுப்படுத்தினார்.
மானிய விலையில் அரசாங்கம் வழங்கி வரும் அந்த விழாக்காலச் சலுகைக்கு கருவூலம் தனியாக நிதி எதனையும் ஒதுக்கவில்லை.
முழுக்க முழுக்க போக்குவரத்து அமைச்சின் பணமே அதற்குப் பயன்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
” ஆண்டு முழுமைக்கும் அச்சலுகையை வழங்க எனக்கும் ஆசை தான்; ஆனால் என்ன செய்வது, அமைச்சுக்கு அது கட்டுபடியாகாதே” என அந்தோனி லோக் சொன்னார்.
மானிய விலையிலான டிக்கெட் சலுகை வெறும் மூன்று நாட்களே என்றாலும், லட்சக்கணக்கான ரிங்கிட்டை அது உட்படுத்தியுள்ளது; இந்த நிலையில் இரு வாரங்களுக்கு அதனை நீட்டிப்பது இயலாது என்றார் அவர்.
ஏப்ரலில் சொந்த ஊர்களுக்குத் திரும்பி பெருநாளைக் கொண்டாட விரும்பும் பொது மக்களின் வசதிக்காக, 599 ரிங்கிட் விலையில் சலுகைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அந்தோனி லோக் அறிவித்தார்.
அச்சலுகையை வரவேற்ற சபா பயனீட்டாளர் சங்கம் CFOS அதனை இரு வாரங்க வரை நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
எல்லாருக்கும் முன்கூட்டியே விடுமுறை கிடைப்பதில்லை; பெருநாள் சமயத்திலும் வேலை செய்பவர்கள் இருக்கவே செய்வதால், அந்த 3 நாள் சலுகை போதுமானதாக இல்லை என CFOS குறிப்பிட்டது.