கோலாலம்பூர், டிச 12 – “எழுத்தை கூட்டுங்கள்! வார்த்தையைச் சொல்லுங்கள்!” என்ற கருப்பொருளுடன், சக்ஸஸ் பத்வேய் அகாடமி ‘Success Pathway Academy’ முதல் முறையாக ஏற்பாடு செய்திருந்த தேசிய அளவிலான தமிழ் எழுத்துக்கூட்டும் போட்டியின் இறுதிச் சுற்று அண்மையில் தலைநகரில் மிக சிறப்பாக நடந்தேறியது.
30 மாணவர்களை எதிர்ப்பார்த்து தொடங்கப்பட்ட இப்போட்டியில் தமிழ்ப்பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளி அல்லாத மாணவர்கள் என்று ஏறக்குறைய 1519 பேர் கலந்து கொண்டது இப்போட்டிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
தமிழ்மொழியின் ஆளுமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்பட்டது. மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய இப்போட்டியின் இறுதியில் முதல் 50 இடங்களைப் பிடித்த 50 மாணவர்களுக்கு நற்சான்றிதழும், போட்டியில் வெற்றிப்பெர்ற முதல் மூன்று போட்டியளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பையோடு காசோலையும் வழங்கப்பட்டது என அதன் ஏற்பாட்டாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.
மொழியோடு சேர்த்து தொழில்நுட்பம் சார்ந்தும் இப்போட்டி நடந்தேறியது தங்களுக்கும் தங்களின் பிள்ளைகளுக்கும் கிடைத்த புதிய அனுபவம் என இப்போட்டியில் பங்கேற்ற பெற்றோர்கள் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டனர்.
புதுமையான இப்போட்டியில் மாணவர்களின் வெற்றிக்கு அதிகம் உழைப்பையும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களும் தங்களின் மகிழ்ச்சியை வெளீப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் செனட்டர் சரஸ்வதி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நிலையில், சக்ஸஸ் பத்வேய் அகாடமியின் தலைமை நிர்வாகி மற்றும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சோபனா ராமச்சந்திரன், தேஜஸ் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் காயத்திரி லோகநாதன், OTPAM நிறுவனத்தின் தலைமை நிர்வாகி முகிலன், முனைவர் இளந்தமிழ், வணக்கம் மலேசியாவின் சந்தைப் பிரிவு மேலாளர் ஜெகனாந்தன் மற்றும் நீதிபதிகள் சரவணன் மற்றும் சிவராம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.