சிரம்பான், டிச 1 – ‘ஓப்ஸ் பாத்தோ” எனும் சாலை போக்குவரத்து துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் பல்வேறு விதிமுறைகளை மீறி குற்றங்களுக்காக 122,208 வாகனமோட்டிகளுக்கு குற்றப் பதிவுகள் வெளியிட்டது.
கடந்த நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 29 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கையில் 719,766 வாகனங்கள் சோதனையிடப்பட்டதாக சாலை போக்குவரத்து இலாகாவின் அமலாக்கப் பிரிவின் உயர் இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமான் கூறினார்.
வாகன உரிமம் இல்லாத குற்றத்திற்கு 28,039 அறிக்கைகளும் வானமோட்டும் லைசென்ஸ் காலாவதியான குற்றத்திற்கு 20,539 அறிக்கைகளும், இதரக் குற்றங்களுக்கு 20,537 அறிக்கைகளும் வெளியிடப்பட்டன என்று செனாவாங் டோல் சாவடியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் பாத்தோ சோதனை நடவடிக்கையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு வார்ப்பட்டை அணியாதது தொடர்பில் 1,388 குற்றப்பதிவுகளும் சாலை சமிக்ஞை விளக்கை மீறியதற்காக 791 குற்றப்பதிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தலை கவசம் அணியாதது, வாகனமோட்டும் போது கைப்பேசியைப் பயன்பயன்படுத்தியது மற்றும் அவசரத் தடத்தில் பயணித்தது உள்ளிட்ட குற்றங்களுக்கு 612 குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.