மலாக்கா, ஏப்ரல் 12 – முன்தினம் மலாக்கா, டுரியான் துங்காலில் போலிஸ் ரோந்து கார் மோதி, 18 வயது இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி, நேற்று மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவ்வாகனத்தை ஓட்டிய போலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 9 மணியளவில் அலோர் காஜா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் 37 வயதான அந்த போலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதாக மலாக்கா காவல்துறைத் தலைவர் டத்தோ ஜைனோலி சாமா தெரிவித்தார்.
இதுவரை இச்சம்பவம் தொடர்பாக ஆறு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதையும், அந்த இளைஞனின் பெற்றோர்களிடமிருந்து வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அந்த போலிஸ் அதிகாரி சம்பவ நேரத்தில், எந்தவிதமான போதைப் பொருட்களை உட்கொள்ளவில்லை என்ற முடிவும் சோதனையின் முடிவில் வெளிவந்திருப்பதையும் ஓர் அறிக்கையின் வழி அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டுரியான் துங்கால் பகுதியில் சட்டவிரோத மோட்டார் பந்தயம் நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, காவல் துறையினர் அங்கு ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது முன்தினம் இந்தச் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.