கோலாலம்பூர், டிச 11 – கோவிட் -19 தொற்று அதிகரித்து வருவதால் 2ஆவது தடுப்பூசியை இன்னும் செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்கள் விரைந்து அதனை செலுத்திக்கொள்ளும்படி மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோய்க்கான அதிக ஆபத்தை கொண்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்றாவது தடுப்பூசியை போட்டுக்கொள்ளும்படியும் மருத்துவ நிபுணர்கள் கேட்டுக்கொண்டனர். டிசம்பர் 9ஆம் தேதி வரை மொத்தம் 828,201 பேர் மட்டுமே இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சின் கிட்ஹப் ‘GitHub’ தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் முதல் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக்கொண்ட பெரியோர்களின் எண்ணிக்கை இன்னமும் 2.5 விழுக்காடாக மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசியை 16.28 மில்லியன் மக்கள் செலுத்திக்கொண்டதை ஒப்பிடுகையில் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளளது.
20 மற்றும் 40 வயதுக்கு உட்பட்ட பிரிவினரிடையே கோவிட் -19 தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் முன்னாள் அதிகாரி டத்தோ டாக்டர் ஜைனல் அரிஃபின் ஒமார் கூறினார்.