கோலாலம்பூர், டிச 22 – சபாவில் இனானாம், கம்போங் கலஞ்சனானில் நேற்றிரவு மணி 11.10 அளவில் நிகழ்ந்த தீவிபத்தில் 12 வீடுகள் அழிந்ததோடு மாற்றுத் திறனாளியான பெண் கருகி மாண்டார். அந்த தீ விபத்தில் கர்ப்பிணி உட்பட நால்வர் காயம் அடைந்தனர்.
தீக்குள்ளான வீடு ஒன்றில் தீ அணைக்கப்பட்ட பின் 50 வயதுடைய இடாம் ஹமீத் என்ற பெண்மணியின் உடலை தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கண்டுப்பிடித்தனர். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு லிண்டாஸ் மற்றும் கோத்தா கினாபாலுவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் என 31 பேர் கொண்ட குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டதாக கோத்தா கினாபாலு தீயணைப்பு மண்டலத்தின் தலைவர் மிஸ்ரன் பிசாரா தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபோது தீ வேகமாக பரவிக் கொண்டிருந்ததாகவும் அதிகாலை மணி 1.16 அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த விபத்தில் 16 முதல் 20 வயதுடைய ஒரு பெண் உட்பட மூவர் காயம் அடைந்தனர்.மேலும், 23 வயதான பெண் ஒருவர் மயக்கமடைந்தார். காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
14 குடும்பத்தினர் தங்கியிருந்த 12 வீடுகள் முற்றாக அழிந்ததாக மிஸ்ரன் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினரும் லைக்காஸ் பொதுமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கோத்தா கினாபாலு மாநாகர் மன்றத்தின் அமலாக்க பிரிவின் இயக்குனர் அப்துல் முக்தி முச்லிஷ் கூறினார்.