தனா மேரா, மார்ச் 25 – இரும்பு வேலி கதவு மேலே விழுந்ததில், தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று மாலை மணி 3.30 வாக்கில், தனா மேரா தொழிற்பேட்டை பகுதியிலுள்ள, அந்நபரின் சொந்த இரும்பு வேலி கதவு தொழிற்சாலையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது, அந்த 70 வயது நபர், இரண்டாவது இரும்பு வேலிக் கதவை பரிசோதனை செய்துக் கொண்டிருந்ததாகவும், அதனை இழுத்து மூட முற்பட்ட போது, வேலிக் கதவின் சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகி, அந்நபர் மீது விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
அதனால், ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, தனா மேரா போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் ஹக்கி ஹஸ்புல்லா தெரிவித்தார்.
அது ஒரு விபத்து எனவும், குற்றவியல் அம்சங்கள் எதுவும் தென்படவில்லை என்பதையும் ஹஸ்புல்லா உறுதிப்படுத்தினார்.
அதனால், அதனை ஒரு திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.