
செப்பாங், நவம்பர் 6 – மூன்று அழுங்குகளை கடத்த முயன்ற, இந்திய நாட்டு ஆடவன் ஒருவனின் செயலை, KLIA – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின், வனவிலங்கு கடத்தல் தடுப்பு பிரிவினர் முறியடித்தனர்.
இம்மாதம் 28-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட அந்த கடத்தல் முயற்சியை மேற்கொண் ஆடவனும் கைதானான்.
இரவு மணி ஒன்பது வாக்கில், இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த அவனை, அங்கு பணியில் இருந்த உதவிப் போலீசார் தடுத்து சோதனையிட்டனர்.
அவன் கொண்டு வந்த பயணப் பையில், சந்தேகிக்கும் வகையிலான பொருட்கள் இருந்ததால், அந்த உதவிப் போலீசார், அரச மலேசிய சுங்கத் துறைக்கும், வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கியதாக, அரச மலேசிய சுங்கத் துறையின், மத்திய வட்டாரத்துக்கான நடவடிக்கை பிரிவு இயக்குனர் வோங் பூன் சியான் தெரிவித்தார்.
பின்னர், அந்த பயணப் பையை தமது தரப்பு திறந்து சோதனையிட்ட போது, அதில் மூன்று அழுங்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பூன் சொன்னார்.
அந்த அழுங்குகளை கொண்டு வந்த நபர் உடனடியாக கைதுச் செய்யப்பட்ட விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
இந்தியாவில் செயல்படும் முகவர்கள், அழுங்குகளை மலேசியா வாயிலாக கொலொம்போவிற்கு கடத்த, சம்பந்தப்பட்ட நபரை இடை தரகராக பயன்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுவதாக பூன் சொன்னார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடத்தல் பொருளின் மதிப்பைக் காட்டிலும் பத்து மடங்கு கூடுதலான அபராதம் அல்லது 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம், அல்லது ஐந்தாண்டுகளுக்கு மேல் போகாத சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.