பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 5 – சைபர்ஜெயாவில், புரோடுவா பெஸ்ஸா ரக கார் ஒன்றை தடுத்து நிறுத்திய போலீசார், அதிலிருந்த ஆடவன் ஒருவனையும், பெண் ஒருவரையும் கைதுச் செய்தனர்.
எனினும், இதர இரு ஆடவர்கள் தப்பிச் சென்று விட்டனர். அக்காரை பெட்டாலிங் ஜெயாவிலிருந்து போலீசார் துரத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
முன்னதாக, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகிக்கும் வகையில் காணப்பட்ட அக்காரை நிறுத்தி சோதனையிட முயன்ற போது, அக்காரில் இருந்த மூன்று ஆடவர்களும், பெண் ஒருவரும் காரை நிறுத்தாமல் தப்பி ஓட முயன்றனர்.
அக்காரை ஒன்பது போலீஸ் ரோந்து கார்கள் சைபர்ஜெயா வரை துரத்திச் செல்லும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
சைபர்ஜெயாவில் அக்காரை வளைத்துப் பிடித்த போலீசார் மேற்கொண்ட சோதனையில், அதில், வீடு புகுந்து கொள்ளையிட தேவையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
கைதுச் செய்யப்பட்டவர்கள் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதை, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் பாக்ருடின் அப்துல் ஹமிட் உறுதிப்படுத்தியுள்ளார்.