புதுடெல்லி, பிப்ரவரி 14 – இந்தியா, ஒடிசா மாநிலத்தில், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண் ஒருவரின் உடலை தகனம் செய்வதற்கு முன் அவர் “கண்களை” திறந்து விழித்தெழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
52 வயதான அப்பெண்ணின் உடலை தகனம் செய்ய கொண்டு சென்ற போது, அதில் ஏற்பட்ட அசைவை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இம்மாதம் முதலாம் தேதி ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில், அப்பெண் 50 விழுக்காட்டு தீப்புண் காயங்களுக்கு இலக்கானதாக, அவரது குடும்பத்தார் கூறியுள்ளனர்.
எனினும், அவர் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை, அப்பெண்ணை வேறு ஒரு மருத்துவ மையத்திற்கு மாற்ற பரிந்துரை செய்தது. பணம் இல்லாததால், அப்பெண்னை அவரது கணவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை அப்பெண் கண்களை திறக்கவில்லை என்பதோடு, மூச்சு பேச்சின்றி காணப்பட்டார்.
அதனால், அவர் இறந்து விட்டதாக எண்ணி, மருத்துவரின் ஆலோசனையும், இறப்பு சான்றிதழும் இன்றி சுடுகாட்டிற்கு தகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட அப்பெண் கண்களை திறந்து பார்த்ததோடு, பின்னர் அங்கிருந்தவர்களிடம் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.