
தைப்பிங்; செப் 16 – செம்படாக் பலகாரத்தின் விலை அதிகமாக இருக்கிறது என எழுந்த வாய்த்தகராறு இறுதியில் மரணத்தில் முடிந்துள்ளது. இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் தைப்பிங் அசாம் கும்பாங்கில் நிகழ்ந்திருக்கிறது.
முன்னதாக செம்படாக் பலகாரத்தை அதிக விலையில் விற்கிறீர்கள் என வாடிக்கையாளர் ஒருவர் கூறியதால் , ஆத்திரமடைந்த 50 வயது கடைக்காரர் வாடிக்கையாளரைக் கடிந்துள்ளார்.
இதனால் வாய்ச்சண்டை எழ, அந்த கடைக்காரர் தாக்கப்பட்டதில் காயமடந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நெஞ்சு வலியலால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே போலிசார் சந்தேகத்தின் பேரில் 40 வயது ஆடவனைக் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து தலைக்கவசம் மற்றும் தாக்கப்பட்டதற்குப் பயன்படுத்தப்பட்ட கட்டையை பறிமுதல் செய்துள்ளனர். சோதனையில் அவ்வாடவன் போதைப் பொருள் உட்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
அவ்வாடவன் செப்டம்பர் 19ஆம் திகதி வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.