கோலாலம்பூர், மார்ச் 21 – “மக்கள் பணத்தை” பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், காமன்வெல்த் விளையாட்டு போட்டியை அரசாங்கம் ஏற்று நடத்தாது.
அரசாங்கம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை ஏற்று நடத்த விரும்பினால், அதற்கான செலவு, காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் வழங்கும், பத்து கோடி யூரோ அல்லது 60 கோடி ரிங்கிட்டை விட கூடுதலாக இருக்கக்கூடாது என்பதில் தமது தரப்பு உறுதியாக இருப்பதாக, இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோஹ் தெரிவித்தார்.
அதனால், கவனக்குறைவான முடிவுகள் எடுக்கப்படுவதை தவிர்க்க, ஒவ்வொரு அம்சத்தையும் அரசாங்கம் விரிவாக ஆராய வேண்டுமென ஹன்னா கேட்டுக் கொண்டார்.
இளைஞர் விளையாட்டு அமைச்சு எப்பொழுதும் மக்களின் நலனுக்கே முன்னுரிமை வழங்கும். காமன்வெல்த் போட்டி நடத்தப்பட்டாலும், மக்களின் வரிப் பணம் விரயமாகாமல் இருப்பது உறுதிச் செய்யப்படும் என மக்களவை கேள்வி பதில் நேரத்தின் போது ஹன்னா சொன்னார்.
2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டியை ஏற்று நடத்துவது குறித்து, நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.