கோலாலம்பூர், மார்ச் 4 – முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு முழு மன்னிப்பு கிடைக்க தவறியதால், அம்னோ தலைவர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மீது அம்னோ டிவிசன் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்ற வதந்திகளை அக்கட்சியின் உதவித் தலைவர் காலிட் நோர்டின் மறுத்துள்ளார். கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஸாஹிட் பதவி விலகக் கோரிய கடிதத்தை மையமாக வைத்து இந்த வதந்திகள் பரவியதாக தகவல்கள் வெளியாகின. அப்படி ஒரு கடிதத்தில் கையெழுத்திடப் பட்டிருந்தாலும் அம்னோ தலைவரை நீக்க முடியாது. எனவே டிவிசன் தலைவர்கள் கையெழுத்திட்டது குறித்து கவலைப்பட வேண்டியதில்லையயென காலிட் நோர்டின் தெரிவித்தார்.
“SRC International” வழக்கில் நஜிப்பின் தண்டனைக்கு முழு மன்னிப்பு வழங்குவதற்குப் பதிலாக, அவரது தண்டனையை மட்டும் குறைத்துள்ள கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தின் முடிவை தெளிவுபடுத்தும் பொருட்டு நேற்று அம்னோ உச்சமன்ற கூட்டம் நடைபெற்றது. நஜிப் உண்மையான நீதியை பெறுவதை உறுதி செய்வதில் அம்னோ கவனம் செலுத்தும் என்று தாமான் அமானில் ஓய்வு பெற்ற மூத்த ராணுவ வீரர்களை சந்தித்தபின் காலிட் நோர்டின் தெரிவித்தார். இதனிடையே நஜிப்பிற்கு முழு மன்னிப்பைப் பெற ஸாஹிட்எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டதால் அவை அனைத்தையும் பொதுமக்களுக்கு தெரிவிக்க முடியாது என அம்னோவின் மற்றொரு உச்சமன்ற உறுப்பிரான அஹ்மாட் மஸ்லான் கூறினார். மேலும் நஜீப்பிற்கு முழு மன்னிப்பைப் பெறுவதற்கான முயற்சிகளில் அம்னோ கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார் .