சுங்கைப் பட்டாணி, ஜன 31 – சுங்கைப் பட்டாணி நகராண்மைக் கழகம் தாமான் பாத்திக்கிலுள்ள அதன் கிடங்கில் 35 தெரு நாய்களை கொடூரமாக கொன்றுள்ளதாக தெரு நாய்களுக்கு தினசரி உணவு வைக்கும் 52 வயதுடைய கே. ராஜேஸ்வரி குற்றஞ்சாட்டியுள்ளார். அந்த தெரு நாய்களுக்கு புகலிடம் வழங்குவதற்கு பிராணிகளுக்கு புகலிடம் வழங்கும் இரண்டு இல்லங்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட நகராண்மைக் கழகத்தின் அதிகாரிகள் அது குறித்து பொருட்படுத்தவில்லையென ராஜேஸ்வரி கூறினார். அந்த தெரு நாய்களை நகராண்மைக் கழகம் பிடித்துச் சென்றதாக நாய்களில் ஒன்றுக்கு தினசரி உணவுகளை வழங்கி வரும் தமது சகோதரியின் மூலம் தாம் தெரிந்துகொண்டதாக பினாங்கைச் சேர்ந்த ராஜேஸ்வரி தெரிவித்தார். அந்த நாய்கள் கிடங்கில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பினாங்கு புக்கிட் மெர்தாஜம் மற்றும் கெடா பெண்டாங் ஆகியவற்றை சேர்ந்த பிராணிகளின் இரண்டு காப்பகங்கள் அந்த நாய்களை பராமரிக்க முன்வந்ததை தொடர்ந்து கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அந்த நாய்களை தாம் மீட்பதற்காக அங்கு சென்றதாக ராஜேஸ்வரி கூறினார்.
அதோடு அந்த நாய்களை பிராணிகள் இல்லத்திற்கு ஏற்றிச் செல்வதற்காக இரண்டு லோரிகளையும் கொண்டுச் சென்றதாகவும் ஆனால் அங்குள்ள பாதுகாவலர் தம்மை உள்ளேவிட மறுத்துவிட்டதாகவும் அப்போது நகரான்மைக் கழகத்தின் சில அதிகாரிகள் நாய்களை இரும்பு தண்டுகளில் அடித்ததையும் அந்நாய்கள் வலியினால் துடித்து அழுவதையும் கண்டதாக அவர் தெரிவித்தார். அந்த நாய்கள் கொல்லப்பட்டதை அறிந்து தமது சகோதரி குவாலா மூடா போலீஸ் நிலையத்தில்புகார் செய்திருப்பதாகவும் ராஜேஸ்வரி கூறினார்.